மல்லிகை பூங்கிடங்கோ?-நீ
மன்மத தேன்விருந்தோ
நிலத்தில் நடக்கையில்
நிழலும் சிரிக்க
பெண்ணே நீதான்
பிரம்மனின் அற்புதமோ?
சிரித்திடும் பால்நிலவோ?-நீ
சிலைகளில் புதுவரவோ?
இமைகள் கொண்டே
இதழின் மொழிகள்
பேசும் நீதான்
பேரழகு ஓவியமோ??
நகங்கள் விண்மீனோ?-நீ
நடந்திடும் பெண்பூவோ?
உடைகள் அணியும்
உன் உடல்
அலையின் நுரையில்
அடித்து வடித்தோ??
தேனினத்தின் சன்னதியோ?-நீ
தேவதைகளின் சந்ததியோ?
நூலாடை மறைக்கும்
நூதன பாகங்கள்
பேரேட்டில் சொல்லாத
பெண்ணினத்தின் சங்கதியோ?
வானத்தின் மேகமோ?-நீ
வசந்தத்தின் ராகமோ?
சோகங்கள் எதையும்
சொல்லாத உன்னிதயம்
தடைகள் வந்தாலும்
தளராத செந்தமிழோ?
நனைந்த புதுமலரோ?-நீ
நடமாடும் பூந்தென்றலோ?
நந்தவனப் புற்களில்
நடைபயிலும் பாதங்கள்
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்களோ?
ஜொலித்திடும் அங்கமே-நீ
ஐந்தடி தங்கமே
கண்களால் கண்டேன்
கவிதையில் சொன்னேன்
"அன்பே நீதான்
அழகுகளில் உச்சமே!"
Subscribe to:
Post Comments (Atom)
good keep it up
ReplyDelete