Wednesday, March 10, 2010

கொட்டு முரசே!!

திசைகள் எட்டும் ஒளிரட்டும் - வாழ்வின்
தீமைகள் எல்லாம் பொசுங்கட்டும்!!
எங்களுக்கான
சட்டங்கள் பிறந்ததென்று
சத்தமாய் கொட்டு முரசே!!

எண்ணெய் பிசுக்கான
எங்கள் கைகள்
வானத்தின் நீலத்தில்
தவழட்டும்!!
உயர்ந்திட்ட கைகள்
தங்கள் இருப்பை - இந்த
உலகத்தில் பதிக்கட்டும்!!
கொட்டு முரசே!!

கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போகட்டும்!!
கட்டுக்குள் இருந்த
காற்று - இன்று
தன்
விலங்கினை விலக்கட்டும்
கொட்டு முரசே!!

பாண்டி ஆட்டத்தில்
கோடுகள் தாண்டிய
பாதங்கள்
பொருளாதார கட்டுக்குள்
பொருத்தது போதுமென்று
கொட்டு முரசே!!

மதமென்னும் பெயராலே
எங்கள் வானத்தை
மறைத்த
சடங்கென்ற கூரைகள்
சட்டென்று சரியட்டும்
சந்தோசமாய் கொட்டு முரசே!!

மெல்லினத்தின் போராட்டம்
ஆதிக்க பிசாசின்
இரும்புத் திரையை
இல்லாமல் செய்ததென்று
எல்லாருக்கும் கொட்டு முரசே!!

அடுக்களை பறவையின்
அறியாமை போக்கிட!!
மக்களவை சூட்சமம்
மகளிரும் புரிந்திட!!
மசோதா நிறைவேறியதை
மத்தளமாய் கொட்டு முரசே!!

வீட்டுக்குள்
பூ கட்டிய இனங்களுக்கும்
இன்று
பூமாலை சூட்டிட
புதுநாளோன்று
பூத்ததேன்று கொட்டு முரசே!!

நுற்றாண்டு பழிச்சொல்
நொடியினில் தீர்ந்ததை!!
ஜடமென்ற புராணங்களுக்கு
சவுக்கடி கிடைத்ததை
செவிப்பறையில் கொட்டு முரசே!!

தடையில்லா எங்கள் கால்கள்
தடமாறி செல்லுமென்ற
பாமர பயங்களை
புறந்தள்ளி புறப்பட்டோமென்று - எங்கள்
புகழ்பாட கொட்டு முரசே!!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியதை கொண்டாடும் மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்......

No comments:

Post a Comment